கல்குவாரி நீரில் மூழ்கி தொழிலாளி சாவு

எட்டயபுரம் அருகே கல்குவாரி நீரில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-12-16 18:45 GMT

எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே உள்ள லிங்கம்பட்டியை சேர்ந்தவர் காசிராஜன் (வயது 55). இவர் கோவில்பட்டியில் உள்ள ஒரு கோழி இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வேலை முடிந்ததும் அவர் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். கோவில்பட்டி அருகே கடலையூர் ரோட்டில் சென்றபோது, அங்குள்ள கல்குவாரியில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்ததால், நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இந்த நிலையில் காசிராஜன் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் கோழி இறைச்சி கடையில் விசாரித்தனர். அப்போது அவர் ஏற்கனவே வேலையை முடித்து சென்று விட்டதாக கூறி உள்ளனர். இந்த நிலையில் நேற்று கல்குவாரியில் ஒருவர் பிணமாக மிதப்பதாக எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, இறந்து கிடந்தவர் காசிராஜன் என்பது தெரியவந்தது. அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்