டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு
4,662 பணியிடங்களுக்கு ஜூலை 12-ம் தேதி தேர்வு நடைபெற்றது.;
சென்னை,
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், வனக்காவலர் ஆகிய பதவிகளில் 2025-ம் ஆண்டு மொத்தம் 3,935 காலிப்பணியிடங்கள் நிரப்ப டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியாகியது. இப்பதவிகளுக்கு ஒரே கட்டத் தேர்வு முறை பின்பற்றப்படுகிறது. அதன்படி, ஜூலை 12-ம் தேதி தேர்வு நல்ல முறையில் நடைபெற்றது. இந்தாண்டு குரூப் 4 தேர்வை 11.48 லட்சம் பேர் எழுதியுள்ளனர். ஒரு இடத்திற்கு தோராயமாக 250 பேர் என்ற விதம் போட்டி நிலவுகிறது.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிராபகர் அறிவித்தார். அதன்படி, செப்டம்பர் இறுதியில் 727 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டது. தற்போது மொத்தம் 4,662 காலிப்பணியிடங்கள் உள்ளன.
இந்தநிலையில், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு 4 முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 4,662 பணியிடங்களுக்கு ஜூலை 12-ம் தேதி நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. முடிவுகளை தேர்வர்கள் https://tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாகவே அறிந்துகொள்ளலாம்.
முடிவுகள் வெளியானதும், அடுத்தக்கட்டமாக கட்-ஆஃப் அடிப்படையில் இணையதளம் வழியாக சான்றிதழ் பதிவேற்றம் செய்ய தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்படும். அதில் பதிவு எண்கள் இடம்பெற்று இருக்கும். தெரிவு செய்யப்பட்டவர்கள் குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதனைத்தொடர்ந்து, மூல சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைப்பு விடுக்கப்படும். அதில் நேரடியாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, பணி நியமனம் செய்யப்படுவார்கள்.