பிரதமர் மோடிக்கு வயது என்பது வெறும் எண்தான், தொடர்ந்து அவர் நாட்டை வழிநடத்த வேண்டும்: பட்னாவிஸ்

பிரதமர் மோடியே தொடர்ந்து நாட்டை வழிநடத்த வேண்டும் என்று மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.;

Update:2025-09-26 06:24 IST

கோப்புப்படம்

மும்பை,

மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மும்பையில் நடந்த ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாடினார். அப்போது அவர் அங்கு எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த செப்டம்பர் 17-ந்தேதி 75 வயதை எட்டியது குறித்தும், அவரது ஓய்வு பற்றிய சர்ச்சை குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “பிரதமர் மோடி தொலைநோக்கு பார்வை கொண்ட, திறமையான தலைவர். அவரது உடல் மற்றும் மன திறனை கருத்தில் கொண்டு பார்த்தால் அவருக்கு வயது என்பது ஒரு எண் மட்டும்தான்.

உடல்நலம் மற்றும் மனதிடம் குறையும் போதுதான் வயதை நாம் முக்கியமான காரணியாக பார்க்கவேண்டும். ஆனால் பிரதமர் மோடியின் நிலை அப்படியல்ல. அவர் உடல்நலம் மற்றும் மன திறனுடன் இருக்கும் வரை அவர் தொடர்ந்து நாட்டை வழிநடத்த வேண்டும்” என்றார்.

நீங்கள் பிராமண சமூகத்தை சேர்ந்தவராக இருப்பது அரசியலில் தடையாக இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த தேவேந்திர பட்னாவிஸ், “முழு மராட்டியமும் எனது சாதியை அறிந்திருக்கிறது. அவர்கள் என்னை ஏற்றுக்கொண்டனர். 2014-ல், பிரதமர் நரேந்திர மோடி என்னிடம் மாநிலத்தின் ஆட்சியை ஒப்படைத்தார். அதைத்தொடர்ந்து வந்த 3 தேர்தல்களில் எனது தலைமையின் கீழ் பா.ஜனதா 100-க்கும் மேற்பட்ட இடங்களை வென்றுள்ளது. எனவே எனது அரசியலில் குறையாக கருதப்பட்ட சாதி பிரச்சினை தீர்க்கப்பட்டது” என்றார்.

தேசிய அளவில் ஏதேனும் பொறுப்பு வழங்கினால் ஏற்றுக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு, “தற்போதைக்கு 5 ஆண்டுகளுக்கு மாநிலத்தை வழிநடத்துவேன், அதன் பிறகு கட்சி தனது எதிர்காலம் குறித்து முடிவு செய்யும்” என்றும் தேவேந்திர பட்னாவிஸ் பதிலளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்