பண மோசடி புகாரில் 2 பேர் உயிரிழப்பு.. காங்கிரஸ் பிரமுகரின் மருமகள் தற்கொலை முயற்சி
கடனை தீர்க்காமல் ஏமாற்றி விட்டதாக காங்கிரஸ் கட்சி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.;
வயநாடு,
வயநாடு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொருளாளராக இருந்தவர் விஜயன் (வயது 78). இவரது மகன் ஜிஜேஷ் (38). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதற்கிடையே கூட்டுறவு வங்கியில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் விஜயன் பணம் பெற்று கொண்டு, பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதனால் மனமுடைந்த அவர் தனது மகனுடன் கடந்த ஆண்டு டிசம்பர் 27-ந் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
மேலும் விஜயன் எழுதியிருந்த கடிதத்தில், இந்த பணத்தை கல்பெட்டா எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணனிடம் கொடுத்ததாக கூறி இருந்தார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் சமரச பேச்சுவார்த்தையில், இந்த பிரச்சினையை தீர்க்க காங்கிரஸ் உரிய பணத்தை ஒதுக்கும் என்று கூறியிருந்தது. ஆனால், இந்த குற்றச்சாட்டை பாலகிருஷ்ணன் மறுத்து இருந்தார். இதனால் பலரிடம் பெற்ற பணம் திரும்ப கொடுக்கப்பட வில்லை.
இந்தநிலையில் விஜயனின் மற்றொரு மகன் விஜேஷ் என்பவரது மனைவி பத்மஜா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதால், அவர் உயிர் பிழைத்தார். மேலும் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டை முன்வைத்து கடிதம் எழுதி வைத்தார்.
இதுகுறித்து பத்மஜா நிருபர்களிடம் கூறும்போது, காங்சிரசின் செயல்பாடுகள் மூலம் விஜயனுக்கு கடன் பிரச்சினை ஏற்பட்டது. அதை தீர்க்க கட்சி தரப்பில் முழு உதவி செய்யப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. கடந்த ஜூன் 30-ந் தேதிக்குள் கடன்கள் தீர்க்கப்படும் என்று கூறியும், அது இதுவரை தீர்க்கப்பட வில்லை. எனவே, காங்கிரஸ் தலைவர்கள் எங்களை ஏமாற்றி விட்டனர். பணத்தை உரியவர்களுக்கு செலுத்துவதற்காக எங்களது வீடு உள்பட அனைத்து சொத்துகளும் அடமானம் வைக்கப்பட்டு உள்ளது. இனி கட்சியுடன் சமரச பேச்சுவார்த்தை பேச போவதில்லை. இந்த சம்பவம் குறித்து முதல்-மந்திரியிடம் புகார் கொடுக்க உள்ளேன் என்றார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.