ஆபரேஷன் சிந்தூர்: “50-க்கும் குறைவான ஆயுத” தாக்குதலிலேயே பாகிஸ்தான் மண்டியிட்டது - இந்திய விமானப்படை
50-க்கும் குறைவான ஆயுதங்களிலேயே, தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் கெஞ்சியதாக இந்திய விமானப்படை துணைத்தளபதி தெரிவித்தார்.;
புதுடெல்லி,
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு எதிராக இந்தியா மே மாதம் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூர் குறித்த புதிய காட்சிகள் மற்றும் விவரங்களை இந்திய விமானப்படை துணைத் தளபதி ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி நேற்று பகிர்ந்து கொண்டார்.
மேலும் இந்தியாவின் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் 4 நாட்களிலேயே மண்டியிட்டது என்றும் இந்த தாக்குதலில் இந்தியா முழுமையாக ஆதிக்கம் செலுத்தியதாக டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விமானப்படை துணைத்தளபதி நர்மதேஷ்வர் திவாரி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “ஆபரேஷன் சிந்தூரில் 50-க்கும் குறைவான ஆயுதங்களிலேயே, தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் கெஞ்சியது. பாகிஸ்தானை மண்டியிட வைத்து முழுமையான ஆதிக்கத்தை அடைய முடிந்தது எங்களுக்கு ஒரு முக்கிய படிப்பினையாக இருந்தது. இதற்கு முன்பு இது நடந்ததில்லை.
நாங்கள் ஒவ்வொரு ஆயுதத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டோம். அது எங்கள் திட்டமிடுபவர்கள் மற்றும் செயல்படுத்தியவர்களின் திறனை வலிமையாக ஒப்புக்கொள்வதாகும், 1971-ம் ஆண்டு போரில் தாக்குதலுக்கு ஆளாகாத பாகிஸ்தானின் சில இலக்குகள் கூட ஆபரேஷன் சிந்தூரில் எங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. அந்த அளவுக்கு நாம் அவர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தினோம்.
போரை தொடங்குவது எளிது, ஆனால் முடிப்பது கடினம். அதை மனதில் வைத்திருப்பது முக்கியமானது. இதில் முக்கிய அம்சம் என்னவென்றால், முழுமையான சுதந்திரம் எங்களுக்கு வழங்கப்பட்டது தான். தாக்குதலின்போது துல்லியமான இலக்கு வைப்பது மிகவும் அவசியம், ஏனெனில் இது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் இலக்கு நீளமாக இருப்பதால், இணை சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஆனால் எந்தவித சேதமும் இல்லாமல் பார்த்துக்கொண்டோம். எங்கள் திட்டமிடல் மற்றும் செயல்பாட்டு மக்களுக்குத்தான் இதற்கான பெருமை சேரும். ஏனெனில் இது எளிதான விஷயம் அல்ல. இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்த நோக்கம் பாகிஸ்தானுக்கு சரியான செய்தியை வழங்குவதுதான். அதை சரியாக செய்தோம்” என்று கூறினார்.