4 அடுக்குகள் கொண்ட வரிமுறைக்கு பதிலாக.. இனி 2 அடுக்குகளாக மாறுகிறது ஜி.எஸ்.டி.
வரிகுறைப்பு மூலம் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.;
புதுடெல்லி,
ஜி.எஸ்.டி. தற்போது 4 அடுக்குகள் கொண்ட வரிமுறையாக இருக்கிறது. 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்குகளாக உள்ளது. இந்நிலையில், தீபாவளிக்குள் ஜி.எஸ்.டி. கணிசமாக குறைக்கப்படும் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் அறிவித்துள்ளார்.
மாற்றி அமைக்கப்படும் ஜி.எஸ்.டி.யில் 2 அடுக்குகள் மட்டுமே இருக்கும் என்று மத்திய அரசு உயர் வட்டாரங்கள் தெரிவித்தன. அதாவது, 5 சதவீதம், 18 சதவீதம் என 2 அடுக்குகள் மட்டுமே இருக்கும்.
தற்போது, 12 சதவீத வரிஅடுக்கில் இருக்கும் 99 சதவீத பொருட்கள், 5 சதவீத வரிஅடுக்குக்கு மாற்றப்பட உள்ளது. அதுபோல், 28 சதவீத வரிஅடுக்கில் இருக்கும் 90 சதவீத பொருட்கள் மற்றும் சேவைகள் 18 சதவீத வரிஅடுக்குக்கு மாற்றப்பட உள்ளது. இதுதவிர, ஆடம்பர பொருட்கள் மற்றும் பாவ பொருட்களுக்கு 40 சதவீதம் என்ற சிறப்பு அடுக்கு கொண்டுவரப்படுகிறது. ஆனால், இதில் வெறும் 7 பொருட்கள் மட்டுமே இருக்கும். புகையிலையும் 40 சதவீத வரிவிதிப்பில் வரும்.
ஜி.எஸ்.டி. கவுன்சில் ஒப்புதல் அளித்த பிறகு இந்த மாற்றங்கள் அமலுக்கு வரும். வரிகுறைப்பு மூலம் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும் என்றும், வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் அதை ஈடுகட்டி விடும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.