தூத்துக்குடி-மும்பை இடையே புதிய ரெயில் எப்போது? ரெயில்வே மந்திரியிடம் கனிமொழி எம்பி கேள்வி
புதிய ரெயில்களை அறிமுகப்படுத்துதல், ரெயில் சேவைகளை நீட்டித்தல் ஆகியவை ரெயில்வே துறையில் தொடர்ச்சியாக நடைபெறும் செயல்முறைகளாகும் என்று மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
தூத்துக்குடி மற்றும் மும்பை இடையிலான ரெயில் இணைப்பு குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, மத்திய ரெயில்வே, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்க்கு கேள்விகளை முன்வைத்தார்.
லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் (ரெயில் எண். 11043/11044)-ஐ தூத்துக்குடிக்கு நீட்டிப்பதன் மூலமோ அல்லது புதிய நேரடி ரெயில் சேவையை அறிமுகப்படுத்துவதன் மூலமோ தூத்துக்குடிக்கும் மும்பைக்கும் இடையே ரெயில் இணைப்பை மேம்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்கத் தேவையை மத்திய அரசு அறிந்திருக்கிறதா; அறிந்திருந்தால், அதன் விவரங்கள் என்ன? இந்த சேவையை அறிமுகப்படுத்துவதற்கான காலக்கெடு தொடர்பான விவரங்கள் என்ன? தூத்துக்குடிக்கு ரெயில் இணைப்பை மேம்படுத்த அரசு வேறு ஏதேனும் நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள்? என்று கனிமொழி எம்பி ரெயில்வே மந்திரியிடம் கேள்வி எழுப்பினார்.
அவரது கேள்விக்கு மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதிலில் கூறியதாவது:
தற்போது மும்பை-தூத்துக்குடி பிரிவில் 19567/19568 தூத்துக்குடி-ஓகா விவேக் எக்ஸ்பிரஸ் சேவை வழங்கப்படுகிறது. தூத்துக்குடி பயணிகளின் வசதிக்காக இந்திய ரெயில்வே 19.7.2024 முதல் 16765/16766 மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் (இரு வாரத்திற்கு ஒருமுறை) ரெயில் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் 16791/16792 திருநெல்வேலி-பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் சேவையை 15.8.2024 முதல் தூத்துக்குடி வரை நீட்டித்துள்ளது. மேலும் புதிய ரெயில்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் ரெயில் சேவைகளை நீட்டித்தல் ஆகியவை ரெயில்வே துறையில் தொடர்ச்சியாக நடைபெறும் செயல்முறைகளாகும். இவை அனைத்தும் போக்குவரத்து நியாயமான தேவைகள், செயல்பாட்டு சாத்தியக்கூறு ஆகியவற்றைப் பொருத்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.