தூத்துக்குடியில் 11.5 கிலோ கஞ்சா, கார் பறிமுதல்: 3 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்துநகர், கோமஸ்புரம் சேதுபாதை ரோடு சந்திப்பு அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.;
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் உத்தரவின்படி, தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி. மதன் தலைமையிலான தனிப்படை போலீசார் மற்றும் தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அருளப்பன், சப்-இன்ஸ்பெக்டர் முகிலரசன் உள்பட காவல்துறையினர் இன்று தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோமஸ்புரம் சேதுபாதை ரோடு சந்திப்பு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படி வந்த ஒரு காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் அவர்கள் திருநெல்வேலி ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த மந்திரமூர்த்தி மகன் ஜெபராஜ் (வயது 28), தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த காளிராஜன் மகன் கார்த்திக்ராஜா(24) மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த இளஞ்சிறார் ஒருவர் என்பதும், அவர்கள் விற்பனைக்காக காரில் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனடியாக மேற்சொன்ன போலீசார் ஜெபராஜ், கார்த்திக்ராஜா ஆகிய இருவரை கைது செய்து, இளஞ்சிறாரை கையகப்படுத்தியதோடு அவர்களிடமிருந்த மொத்தம் 11 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.