767 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி, மைக்ரோ சிப் பொருத்தி உரிமம் வழங்கப்பட்டது - சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சியில் 7 இடங்களில் செல்லப்பிராணிகளுக்கு வெறி நாய்க்கடி தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது.;
சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998, விதிகள் 2023, பிரிவு 292ன் படி பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கான உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பினை முறைப்படுத்த கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் முதல் பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளம் வாயிலாக செல்லப்பிராணி உரிமம் பெறும் முறை நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் செல்லப்பிராணிக்களுக்கான உரிமம் பெறும் நடைமுறையை மேலும் விரைவுபடுத்தவும், இதன்மூலம் செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் எளிதாக தங்கள் செல்லப்பிராணிகளுக்கான உரிமத்தை பெற்றுக் கொள்வதற்காகவும் மேம்படுத்தப்பட்ட இணையதள சேவை (ஆன்லைன் போர்டல்) மேயரால் 03.10.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளம் வாயிலாக செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பதிவு செய்யும் உரிமையாளர்களுக்குசெல்லப் பிராணிகளுக்கான உரிமை பதிவு செய்தல், வெறி நாய்க்கடி நோய் தடுப்பூசி நாய்களுக்கு செலுத்துதல் மற்றும் மைக்ரோப்சிப்பிங் பொருத்துதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இப்பணியை விரிவுபடுத்தும் வகையில், செல்லப்பிராணி வளர்ப்பவர்களின் வசதிக்காகவும், செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு உரிமம் பெறுவதற்கும், வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி செலுத்தி, மைக்ரோ சிப்பிங் செல்லப் பிராணிகளுக்கு பொருத்துவதற்காகவும் 09.11.2025, 16.11.2025 மற்றும் 23.11.2025 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம் நடத்திட பெருநகர சென்னை மாநகராட்சியால் திட்டமிடப்பட்டு, அதன் தொடர்ச்சியாக, இன்று முதல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
அதன்படி செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் எளிதில் பயன்படும் வகையில் மைக்ரோ சிப்பிங் பொருத்தும் பணி மற்றும் வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி (Anti Rabies Vaccination) செலுத்தும் பணி பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் திரு.வி.க. நகர், புளியந்தோப்பு, லாயிட்ஸ்காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாப்பேட்டை, மீனம்பாக்கம் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையங்களிலும், சோழிங்கநல்லூர் நாய் இனக்கட்டுபாட்டு மையத்திலும், என மொத்தம் 7 மையங்களில் நடைபெற்றது. முகாம்களில் 727 செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தி, மைக்ரோ சிப்பிங் பொருத்தி செல்லப்பிராணியின் உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது.
மேலும், செல்லப்பிராணியின் உரிமையாளர்கள் எளிதில் பயன் பெறும் வகையில் வருகின்ற 16.11.2025 மற்றும் 23.11.2025 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கண்ட மையங்களில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.