சென்னையில் 66,117 மரங்களின் கிளைகள் வெட்டி அகற்றம்: மாநகராட்சி தகவல்

சென்னையில் 66,117 மரங்களின் கிளைகள் வெட்டி அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.;

Update:2025-10-28 14:26 IST

சென்னை,

வடகிழக்குப் பருவமழையையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் உள்ள மரங்களின் கிளைகளை வெட்டி அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .

கடந்த 17.10.2025 அன்று காலை 8.30 மணி முதல் இன்று (28.10.2025) காலை 8.30 மணி வரை சராசரியாக 267.80 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. மேலும், 28.10.2025 காலை 8.30 மணி முதல் காலை 11 மணி வரை சராசரியாக 5.89 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.அதிகபட்சமாக மேடவாக்கம் சந்திப்பில் 11.40 மி.மீ. மழைப்பொழிவும் (பெருங்குடி மண்டலம்), குறைந்தபட்சமாக முகலிவாக்கம் பகுதியில் 0.60 மி.மீ (ஆலந்தூர் மண்டலம்) பெய்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 15 மண்டலங்களில் 01.07.2025 முதல் இதுவரை மொத்தம் 66,117 மரங்களின் கிளைகள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. இந்தப் பணிகளுக்காக 15 ஹைட்ராலிக் மர அறுவை இயந்திர வாகனங்கள், 2 ஹைட்ராலிக் ஏணிகள், 224 கையடக்க மர அறுவை இயந்திரங்கள், 216 டெலஸ்கோபிக் மர அறுவை இயந்திரங்கள் என மொத்தம் 457 மர அறுவை இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

மேலும், தற்போது தொடங்கியுள்ள வடகிழக்குப் பருவமழையின் காரணமாக விழுந்த மரங்கள் மற்றும் மரங்களின் கிளைகளை அகற்றும் பணிகளும் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட்டது. 17.10.2025 அன்று முதல் தொடங்கிய வடகிழக்குப் பருவமழையின் காரணமாக 27.10.2025 வரை 55 மரங்கள் மற்றும் மரக்கிளைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இன்று (28.10.2025) மழையின் காரணமாக விழுந்துள்ள 4 மரங்கள் மற்றும் மரக்கிளைகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும், வடகிழக்குப் பருவமழையின் காரணமாக விழும் மரங்களை உடனுக்குடன் அகற்றுவதற்காக மண்டலத்திற்கு தலா 12 பணியாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மரக்கழிவுகளை அப்புறப்படுத்துவதற்காக ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா ஒரு டாடா ஏஸ் வாகனம் என 15 வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றும் வகையில் 160 எண்ணிக்கையில் 100 எச்.பி. மோட்டார் பம்புகள், 550 டிராக்டர்களில் பொருத்தப்பட்ட பம்புகள் உள்ளிட்ட பல்வேறு திறன் கொண்ட 1,496 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் மழைநீர் வடிகால்களில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்ற 7 சூப்பர் சக்கர் வாகனங்களும் தயார் நிலையில் உள்ளன.

தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரானது இந்த நீரிறைக்கும் பம்புகளின் மூலம் அருகிலுள்ள மழைநீர் வடிகால்கள், கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று (28.10.2025) காலை 11 மணி நிலவரப்படி, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 22 டிராக்டர் பம்புகள் மற்றும் 100 எச்.பி. திறன் கொண்ட 19 டீசல் பம்புகள் மூலம் தேங்கியுள்ள மழைநீர் வெளியேற்றப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்