சென்னை: திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக்கொலை
கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
சென்னை திருவான்மியூரை சேர்ந்த வழக்கறிஞர் கவுதம். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் திமுக பிரமுகரும், ரியல் எஸ்டேட் அதிபருமான குணசேகரன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், இந்த கொலை வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த திமுக பிரமுகர் நேற்று மாலை தனது நண்பர்களுடன் அடையாறு அருகே காரில் சென்றுகொண்டிருந்தார். அடையாறு பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது அவரது காரை பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் இடைமறித்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த குணசேகரன், கும்பலிடமிருந்து தப்பிக்க அடையாறு பிரதான சாலையில் ஓடியுள்ளார். ஆனாலும், அந்த கும்பல் குணசேகரனை விடாமல் ஓட ஓட துரத்திச்சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்தது. இதில் முகம் முழுவதும் சிதைந்த நிலையில் குணசேகரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் குணசேகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் வழக்கறிஞர் கவுதம் கொலைக்கு பழிக்குப்பழியாக குணசேகரன் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.