திருப்பூர், பல்லடத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்
மாலை 4.30 மணிக்கு திருப்பூர் பி.என். ரோடு மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.;
‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார்.
அதன்படி, திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். தொடர்ந்து நேற்று மடத்துக்குளத்தில் பிரசாரத்தை முடித்துவிட்டு, தாராபுரம் வந்தார். அங்கு மக்கள் மத்தியில் பேசினார். பின்னர் இரவு 9.30 மணி அளவில் காங்கயம் சட்டமன்ற தொகுதியில் பிரசாரம் செய்தார். இதையடுத்து பிரசாரத்தை முடித்துவிட்டு திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கினார்.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு திருப்பூர் தொழில்துறையினரை சந்தித்து குறைகளை கேட்கிறார். தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கிறார். பின்னர் மாலை 4.30 மணிக்கு திருப்பூர் பி.என். ரோடு மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார். 6 மணி அளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மக்கள் மத்தியில் பேசுகிறார். பின்னர் பல்லடம் மார்க்கெட் அருகே பேசுகிறார்.பின்னர் அவர் கோவையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்குகிறார்.
திருப்பூரில், எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் வகையில், விளம்பர பேனர்கள், கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் அவருக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.