சென்னையில் 20 செ.மீ. அளவுக்கு மழை பெய்தாலும் சாலைகளில் தண்ணீர் தேங்காது: மேயர் பிரியா தகவல்

சென்னையில் பருவ மழையின்போது 15 செ.மீ. முதல் 20 சென்டி மீட்டருக்கு உட்பட்ட மழையை தாங்கக்கூடிய சூழல் மாநகராட்சியிடம் உள்ளது என்று மேயர் பிரியா கூறினார்.;

Update:2025-10-05 19:59 IST

பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பருவ மழை தொடங்க இருப்பதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் எந்தெந்த இடங்கள் தாழ்வான பகுதிகள் என்பதை கண்டறிந்து அங்கு 100 எச்.பி. மோட்டார் பொருத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. வருகிற 15-ம் தேதிக்கு பிறகு எந்த பகுதியிலும் ரோடுகளை 'கட்' செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளோம்.

இந்த ஆண்டு சென்னை மாநகராட்சியில் 3 வகையில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகரம் கடற்கரைக்கு அருகில் உள்ள நகரமாகும். பல இடங்கள் திட்டமிடப்படாமல் உருவான பகுதியாகும். எனவே பருவ மழையின்போது 15 செ.மீ. முதல் 20 சென்டி மீட்டருக்கு உட்பட்ட மழையை தாங்கக்கூடிய சூழல் மாநகராட்சியிடம் உள்ளது. அதற்கான கட்டமைப்பு எல்லாம் மழைநீர் வடிகால் மூலம் மேம்படுத்தி இருக்கிறோம்.

20 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்தால் இயற்கை கொடுக்ககூடிய மழை சூழலாக இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் இதற்கு முன்னால் தண்ணீர் நிற்கும் சூழல் இருந்தால் 7 நாள், 8 நாள் தண்ணீரை வெளியேற்ற கால அவகாசம் தேவைப்படும். ஆனால் இப்போது உள்ள கட்டமைப்புகளில் 24 மணி நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் தண்ணீரை வெளியேற்றும் வகையில் கட்டமைப்பை மேம்படுத்தி இருக்கிறோம். சாலைகளில் தண்ணீர் தேங்காது.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்