எலிக்கு தலையாக இருப்பதை விட.. புலிக்கு வாலாக இருப்பதே பெருமை - ஜெயக்குமார் பேட்டி

சாகும் வரை அதிமுகவில் தான் இருப்பேன். என் உயிர் போனாலும் என் மீது அதிமுக கொடிதான் போற்றப்படும் என ஜெயக்குமார் கூறியுள்ளார்.;

Update:2025-11-28 15:27 IST

சென்னை,

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளார். தவெக நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், மேற்கு மண்டலத்தின் 4 மாவட்டங்களுக்கான அமைப்புச் செயலாளராகவும் செங்கோட்டையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் தவெகவுக்கு செங்கோட்டையனின் அனுபவம் உறுதுணையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் விஜய்யுடன் நேரடியாக கலந்தாலோசித்து செயல்படும் வகையில் செங்கோட்டையனுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிமுக ஆதரவு வாக்குகளை விஜய் பக்கம் திரும்ப வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் கொங்கு வேளாள கவுண்டர் சமூக வாக்குகளை செங்கோட்டையன் மூலமாக தவெக பிரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் அதிமுகவில் இருந்து இன்னும் சிலரையும் தவெக பக்கம் இழுக்கும் பணிகளில் செங்கோட்டையன் ஈடுபடலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

நான் பெரிதும் மதிக்கக் கூடியவர் அண்ணன் செங்கோட்டையன். அவர் ஒரு முடிவு எடுத்து தவெகவில் இணைந்துள்ளார். அதனால் ஒரு கருத்துதான் சொல்ல முடியும்.எங்கிருந்தாலும் வாழ்க.. அதேபோல் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பின் ஜெயக்குமாரும் செல்கிறார் என்று சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. எனக்கு எப்போதும் ஒரே கட்சி தான்.. நேற்று, இன்று, நாளை.. ஏன் செத்தாலும் அதிமுக கொடியுடன் தான் செல்வேன். யார் வீட்டின் முன்பாகவும் சென்று காத்திருப்பவன் நான் அல்ல.

புலிக்கு வாலாக இருப்பதே பெருமை..ஆனால் எலிக்கு தலைவாக இருக்க கூடாது.. இங்கே அதிமுக தான் புலி.. எலி என்று எந்தெந்த கட்சிகளை சொல்கிறேன் என்பதை நீங்களே புரிந்து கொள்ளலாம். எனது வாழ்நாளில் புலிக்கு வாலாக இருப்பதையே பெருமையாக கருதுகிறேன். எலிக்கு தலையாக இருந்து பிரயோஜனம் கிடையாது. நான் திமுகவுக்கோ, தவெகவுக்கோ போக மாட்டேன். அது ஒருநாள் நடக்காது.. அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தில் இருப்பதே எனக்கு பெருமை.. அதிமுக தான் சபாநாயகர், அமைச்சர், மாவட்டச் செயலாளர், மாணவரணி செயலாளர், எம்ஜிஆர் மன்ற செயலாளர் என்று 15க்கும் அதிகமாக பதவிகளை கொடுத்தது. அதனால் வாழ்நாள் முழுக்க எம்ஜிஆர், ஜெயலலிதாவின் புகழை பாடும் வானம்பாடியாகவே இருப்பேன். வேறு எங்கும் செல்ல மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்