கரூர் கூட்ட நெரிசல்: உயிரிழந்தவர்களில் ஒரு பெண் மட்டும் அடையாளம் காணப்படவில்லை - மாவட்ட கலெக்டர்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 39 பேர் பலியானார்கள். இதில் 10 பேர் குழந்தைகள், 17 பேர் பெண்கள், 12 பேர் ஆண்கள் ஆவர்.;
கரூர்,
த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய், வாரம்தோறும் சனிக்கிழமையன்று பிரசார கூட்டங்களை நடத்தி வருகிறார். முதல் கட்டமாக திருச்சி, அரியலூரில் பிரசாரத்தை தொடங்கிய அவர்,2-ம் கட்டமாக நாகைமற்றும் திருவாரூரில் பிரசாரம் செய்தார். அந்த வரிசையில் 3-வது கட்டபிரசாரத்தை நாமக்கல்லில் நேற்று தொடங்கினார். அதனைத்தொடர்ந்து அங்கு பிரசாரத்தை முடித்துக்கொண்டு கரூர் புறப்பட்டார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேற்று பகல் 12 மணியளவில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அவரை காண நேற்று காலை முதலே அந்த கட்சியின் தொண்டர்கள் ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர்.
இதனையடுத்து நடந்த கூட்டநெரிசலின் காரணமாக ஏராளமானவர்கள் மயங்கி விழுந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் சுமார் 6 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் ஆவார்கள். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 39 பேர் பலியானார்கள். இதில் 10 பேர் குழந்தைகள், 17 பேர் பெண்கள், 12 பேர் ஆண்கள் ஆவர்.
இந்த சம்பவம் தொடர்பாக கரூர் - திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் சரவணன் கூறுகையில், “கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 39 பேரில் 38 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 14 உடல்களுக்கு போஸ்ட் மார்டம் செய்யப்பட்டு, உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கான உடற்கூராய்வை டாக்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் அவர்கள் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். 51 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். அதில் ஒருவர் மட்டும் கவலைக்கிடமாக உள்ளார். மொத்தமாக 111 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், சேலம் ஆகிய மருத்துவமனையிலிருந்து அந்த டீன் உட்பட பலரும் இங்கே வந்துள்ளனர். எவ்வளவு விரைவாக இறந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்க முடியுமா அதனை செய்வோம். உயிரிழந்த 39 பேரில் ஒரு பெண்ணின் உடல் மட்டும் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் அடையாளம் காணப்படும்” என்று அவர் கூறினார்.