வேலூரில் கடத்தப்பட்ட 4 வயது சிறுவன் மீட்பு
கர்நாடக பதிவெண் கொண்ட காரில் வந்த மர்ம நபர்கள் சிறுவனை கடத்தி சென்றனர்;
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பவள தெருவை சேர்ந்தவர் வேணு. இவருக்கு 4 வயதில் மகன் உள்ளார். இதனிடையே, மகனை இன்று மதியம் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வேணு தனது பைக்கில் அழைத்து வந்தார். வீட்டு வாசலில் மகனை இறக்கிவிட்டுவிட்டு வேணு பைக்கை உள்ளே கொண்டு சென்றார்.
அப்போது, அங்கு காரில் வந்த மர்ம நபர்கள் வேணுவின் மகனை கடத்தி சென்றனர். தடுக்க முயன்ற வேணுவின் முகத்தில் மிளகாய் பொடி வீசிவிட்டு சிறுவனை கடத்தி சென்றனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரலான நிலையில் மகன் கடத்தப்பட்டது தொடர்பாக வேணு போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கர்நாடக பதிவெண் கொண்ட காரில் வந்த மர்ம நபர்கள் சிறுவனை கடத்தி சென்றது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், குடியாத்தத்தில் கடத்தப்பட்ட 4 வயது சிறுவனை போலீசார் மீட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அடுத்த தேவிகாபுரம் என்ற பகுதியில் வைத்து சிறுவனை போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர். சிறுவனை கடத்திய மர்ம நபர்களை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.