குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: புதிய செயலி மூலம் காணாமல் போன 12 குழந்தைகள் மீட்பு

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் நேற்றும், காப்பு தரித்தல் நிகழ்வு இன்றும் நடைபெற்றது.;

Update:2025-10-03 21:44 IST

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் நேற்றும் (2.10.2025), காப்பு தரித்தல் நிகழ்வு இன்றும் (3.10.2025) நடைபெற்றது.

தசரா திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்த நிலையில் அங்கு காணாமல் போன குழந்தைகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்க உதவும் பொருட்டு தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் முன்னெடுப்பின்படி Project Guardian எனும் புதிய செயலி காவல்துறை சார்பாக உருவாக்கப்பட்டது.

இந்த செயலியை கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 9 காவல் உதவி மையம் (May I Help You) மற்றும் காணாமல் போன குழந்தைகளை மீட்கும் 8 காவல் குழுவினர் ஆகியோரின் செல்போனில் நேரடியாக பயன்படுத்தினர்.

அதன்படி கோயில் அல்லது அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏதேனும் குழந்தை தனித்து நின்றால் அந்த குழந்தையை உடனடியாக காவல்துறையினர் மீட்டு மேற்சொன்ன காவல் உதவி மையத்திலோ அல்லது குழந்தைகள் மீட்பு காவல் குழுவினரிடமோ ஒப்படைத்து விடுவர். உடனடியாக அந்த காவல்துறையினர் மீட்கப்பட்ட குழந்தையின் புகைப்படம் மற்றும் சிறு குறிப்புடன் அந்த செயலில் பதிவேற்றம் செய்துவிடுவர். இது உடனடியாக நிகல் நேரத்தில் அந்த செயலியை பயன்படுத்தும் அனைத்து காவல்துறையினருக்கும் தெரியவரும்.

அதன்படி குழந்தையை தவறவிட்ட பெற்றோர் அருகில் உள்ள எந்த காவல் உதவி மையத்தையும் அல்லது காணாமல் போன குழந்தைகளை மீட்கும் காவல் குழுவினரிடமோ புகார் அளித்து அந்த குழந்தை குறித்து தகவல்களை கூறினால் உடனடியாக ஏற்கெனவே காணாமல் போன குழந்தைகள் குறித்த பதிவுகளுடன் ஒப்பிட்டு பார்த்து அந்த குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த செயலியின் மூலம் மொத்தம் 12 காணாமல் போன குழந்தைகள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் Project Guardian செயலியை காவல்துறையினருடன் இணைந்து உருவாக்க உதவிய கோவில்பட்டி நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்