நெல்லை: இரு பிரிவினர் இடையே பிரச்சினையை தூண்டும் வீடியோ பதிவிட்டவர் கைது
பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.;
நெல்லை மாவட்டம், பாப்பாக்குடி, புதுகிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் அஜித்சூர்யா (வயது 19), சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இருதரப்பினருக்கு இடையே பிரச்சினையை தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய வசனங்கள் வைத்து கையில் அரிவாளுடன் வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளார்.
இதுகுறித்து பாப்பாக்குடி காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, சமூக வலைத்தளங்களில் இரு தரப்பினரிடையே பிரச்சினையை தூண்டும் விதமாக வீடியோவை வெளியிட்ட அஜித்சூரியாவை நேற்று (1.5.2025) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தார்.
திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினர் சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இதுபோன்று பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.