கல்லிடைக்குறிச்சி ரெயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை
கல்லிடைக்குறிச்சி ரெயில் நிலையத்தில் தினந்தோறும் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர் பயணம் செய்து வருகின்றனர். ஆண்டுக்கு சுமார் ரூ.1.33 கோடி வருவாய் வருகிறது.;
கல்லிடைக்குறிச்சி ரெயில் பயணிகள் நலச் சங்கத்தின் தலைவர் கவிஞர் கல்லிடைக்குயில் உமர்பாரூக், மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனாவிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், "திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி ரெயில் நிலையத்தில் தினந்தோறும் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர் பயணம் செய்து வருகின்றனர்.
ஆண்டுக்கு சுமார் 1.33 கோடி ரூபாய் வருவாய் வருகிறது. மீட்டர் கேஜ் காலத்தில் மூன்று தண்டவாளங்களுடன் 24 மணி நேரமும் நிலைய மேலாளருடன் பிளாக் ஸ்டேஷன் அந்தஸ்து பெற்று இருந்தது. அகலப் பாதையாக மாற்றப்பட்டப் பிறகு தரம் குறைக்கப்பட்டு, ஒற்றைத் தண்டவாளத்துடன் இயங்கி வருகிறது.
மதுரை ரெயில்வே மண்டலத்தில் அதிக வருவாய் தரும் ரெயில் நிலையங்களில் 22ம் இடத்தில் கல்லிடைக்குறிச்சி உள்ளது. இத்தகு சிறப்பு பெற்ற கல்லிடைக்குறிச்சி ரெயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.