கையெழுத்து இயக்கத்திற்கு அனுமதி மறுப்பு: போலீசாருடன் கடும் வாக்குவாதம் செய்த தமிழிசை
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக அனுமதியின்றி கையெழுத்து இயக்கம் நடத்தியதாக தமிழிசை சவுந்தரராஜன் கைது செய்யப்பட்டார்.;
சென்னை,
தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் தமிழக அரசோ அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிகத்திற்கு வழங்க வேண்டிய 2152 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவிக்கவில்லை. இதனை எதிர்த்து தமிழக அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது மேலும் பிரதமர் மோடிக்கு கடிதமும் எழுதப்பட்டுள்ளது. இந்த சூழலில் தமிழகத்தில் மும்மொழி கொள்கையை செயல்படுத்த வேண்டும் என கோரி பா.ஜ.க. சார்பாக கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
இதன்படி தமிழக பா.ஜனதா சார்பில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக 'சமக்கல்வி எங்கள் உரிமை' எனும் கையெழுத்து இயக்க தொடக்க நிகழ்ச்சி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அதில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்டவர்கள் கையெழுத்திட்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
மேலும் தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்த இருப்பதாகவும், அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து கையெழுத்து பெற இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை சென்னை எம்.ஜி.ஆர். நகரில் தமிழிசை சவுந்தரராஜன் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. அவர் இந்தி மொழிக்கு ஆதரவாக மக்களிடம் கையெழுத்தை பெற்று வந்தார். ஆனால் கையெழுத்து இயக்கத்திற்கு போலீசாரின் அனுமதி பெறவில்லை என்றும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்வகையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுவதாகவும் கூறி தமிழிசையை தடுத்தனர்.
ஆனால் அனுமதி பெற்று தான் கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. தீவிரவாதி மாதிரி என்னை ஏன் போலீசார் சுற்றி உள்ளனர், எனக்கு புரியவில்லை என தமிழிசை வாக்குவாதம் செய்தார். இதனையடுத்து தமிழிசையை போலீசார் கைது செய்த நிலையில் வாகனத்தில் ஏற மறுத்து போலீசாரோடு வாக்குவாதம் மேற்கொண்டார். தொடர்ந்து அரை மணி நேரமாக வாகனத்தில் ஏற தமிழிசை மறுத்ததால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனைத்தொடர்ந்து போலீசாரை கண்டித்து பா.ஜ.க.வினர் கண்டன கோஷம் எழுப்பினர்