கோவையில் மக்களை அச்சுறுத்தி பிடிபட்ட ரோலக்ஸ் யானை உயிரிழப்பு
ரோலக்ஸ் யானையை கடந்த மாதம் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.;
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர், நரசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மாதம் ரோலக்ஸ் யானை சுற்றித்திரிந்தது. அந்த யானை அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்தது. இதையடுத்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ரோலக்ஸ் யானையை கடந்த மாதம் 17ம் தேதி வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். புள்ளாகவுண்டன்புதூர் அருகே பெரும்பள்ளம் என்ற பகுதியில் யானை பிடிபட்டது.
இதையடுத்து பிடிபட்ட ரோலக்ஸ் யானை பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் யானைகள் முகாமில் விடப்பட்டது. யானையின் கழுத்தில் சிக்னல் பட்டை அணிவித்து அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், ரோலக்ஸ் யானை இன்று உயிரிழந்தது. வால்பாறை அருகே மந்திரி மட்டம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் மேச்சலில் இருந்த யானை இன்று மதியம் 2 மணியளவில் ஒரு பெரிய மேட்டில் ஏறியபோது வழுக்கி விழுந்தது. இதில் படுகாயமடைந்த யானை மாலை 4 மணியளவில் உயிரிழந்தது. ரோலக்ஸ் யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.