ரவுடி நாகேந்திரன் உடல் முன்னே திருமணம் செய்துகொண்ட இளையமகன் அஜித்
இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நாகேந்திரனின் உடல் முன்பு அவரது இளையமகன் திருமணம் நடைபெற்றது.;
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் கைதான முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி நாகேந்திரன், கல்லீரல் பாதிப்பால் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக புழல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாகேந்திரன் உடல் பிரேத பரிசோதனை செய்வது தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது தங்கள் தரப்பில் ஒரு டாக்டரை அனுமதிக்க வேண்டும் என நாகேந்திரனின் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். அதனை நீதிபதி சதீஷ்குமார் நிராகரித்தார். பின்னர் அவரது உத்தரவின்பேரில் மாதவரம் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு தீபா மேற்பார்வையில் டாக்டர் சாந்தகுமார் தலைமையில் ஸடான்லி மருத்துவ கல்லூரி தடயவியல் துறை தலைவர் பிரியதர்ஷினி, டாக்டர்கள் நாராயணன், ராஜேஷ் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்து முடித்தனர்.
இதற்கிடையில் வியாசர்பாடி சத்யமூர்த்தி நகரில் உள்ள நாகேந்திரன் வீட்டில் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த சூழலில் ஸ்டான்லி மருத்துவமனையில் நாகேந்திரனின் உடல் அவரது மூத்த மகன் அஸ்வத்தாமனிடம் இன்று காலை ஒப்படைக்கப்பட்ட நிலையில், வியாசர்பாடியில் உள்ள வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் வியாசர்பாடியில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நாகேந்திரனின் உடல் முன்பு அவரது இளையமகன் அஜித்துக்கு, ஏற்கெனவே நிச்சயித்த பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.