சென்னையில் விநாயகர் சிலைகள் கரைக்கும் பணி தொடக்கம்
சென்னையின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட 1,500க்கும் மேற்பட்ட சிலைகள் கடற்கரையில் கரைக்கப்படுகின்றன.;
சென்னை,
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் இன்று கரைக்கும் பணி தொடங்கி உள்ளது.
பட்டினப்பாக்கம், திருவான்மியூர், நீலங்கரை, காசிமேடு, திருவொற்றியூர், புதுவண்ணாரப்பேட்டை, மீன் பிடிதுறைமுகம் ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன. மெரினா கடற்கரையில் மட்டும் 1,565 விநாயகர் சிலைகள் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விநாயகர் சிலைகளின் ஊர்வலத்தைத் தொடர்ந்து சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. சுமார் 16,500 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஊர்க்காவல் படையினர் 2,000 பேரும் கூடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக சென்னை எழும்பூர் புதுப்பேட்டை, ராயப்பேட்டை, ஐஸ் ஹவுஸ், ஆகிய பல்வேறு முக்கிய இடங்களான இஸ்லாமியர்கள் இருக்கக்கூடிய இடங்களில் மசூதிகளிலும் கிறிஸ்துவ ஆலயங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அடுக்குமாடி குடியிருப்புகளில் மேல் தளத்திலிருந்தும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். ஊர்வலமாக விநாயகர் சிலைகள் எடுத்துச்செல்லப்பட்டு பின்னர் கிரைன் மூலமாக அவை கடற்கரைகளில் கரைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பட்டினப்பாக்கம்,நீலங்கரை கடற்கரையில் ராட்சத கிரேன் மூலம் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வருகின்றன.