திருநெல்வேலி: இன்ஸ்டாகிராமில் இரு பிரிவினரிடையே பிரச்சினையை தூண்டும் வீடியோ பதிவு- வாலிபர் கைது

பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.;

Update:2025-09-21 16:49 IST

திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம், மடத்துபட்டி, கீழத் தெருவை சேர்ந்த அயோத்தி என்பவரின் மகன் கலையரசன் (வயது 20), சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்சினையை தூண்டும் வகையில் வீடியோ மற்றும் புகைப்படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்களை பதிவு செய்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளார். இதுகுறித்து தேவர்குளம் காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்தது.

இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் லூக் அசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சமூக வலைதளங்களில் இரு தரப்பினரிடையே பிரச்சினையைத் தூண்டும் விதமாக வீடியோவை வெளியிட்ட கலையரசனை நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இது போன்று பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்