இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 28-04-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
நடிகர் அஜித்குமாருக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து
பத்ம பூஷன் விருது பெற்ற திரைப்பட நடிகர் அஜித்குமாருக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெர்ரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமார்கலைத்துறை மட்டுமன்றி பிற துறைகளிலும் மென்மேலும் பல சாதனைகள் படைத்து இளைஞர்களுக்கு தொடர்ந்து ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்க வேண்டுமென மனமார வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஓசூரில் ஆசிரியை வீட்டில் 48 சவரன் நகைகள் திருட்டு
ஓசூரில் அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 48 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். கொள்ளை சம்பவம் தொடர்பாக ஓசூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் வருகிற 3-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
77 நீதிபதிகள் பணியிட மாற்றம்
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட நீதிபதிகள் 77 பேரை பணியிட மாற்றம் செய்து சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் அல்லி அறிவித்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் வரும் மே 13ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என கோவை மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், அந்த நீதிமன்றத்தின் நீதிபதி நந்தினி தேவியும் பணியிட மாற்றம் செய்யப்படுள்ளார். வழக்கில் 13-ம் தேதி தீர்ப்பு வழங்கிய பின்னரே நந்தினி தேவி கரூர் மாவட்ட நீதிமன்ற பணிக்கு செல்வார் என கூறப்படுகிறது.
நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது
2025-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி வருகிறார். அதன்படி, நடிகர் அஜித் குமாருக்கு பத்மபூஷன் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.
அதைபோல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு கவுரவித்தார்.
சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய மணப்பாறை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சியில் 2024-ல் பெரியார் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக சீமான் மீது நடவடிக்கை எடுக்ககோரி வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் என்பவர் அளித்த புகாரில் மணப்பாறை போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பூந்தமல்லி - போரூர் மெட்ரோ 2ம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றி
பூந்தமல்லி - போரூர் மெட்ரோ 2-ம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை 9 கி.மீ. தொலைவுக்கு டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை வெற்றி அடைந்துள்ளது.
அமைச்சராக மனோ தங்கராஜ் பதவியேற்பு
மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் மனோ தங்கராஜ். அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் கவர்னர் ஆர்.என்.ரவி செய்து வைத்தார். இந்த நிகழ்வில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அதிமுக பொதுக்குழு, இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்தில் விசாரணை தொடக்கம்
அதிமுக பொதுக்குழு, இரட்டை இலை விவகாரம் தொடர்பாக டெல்லி தேர்தல் ஆணையத்தில் விசாரணை தொடங்கியுள்ளது. இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரிய புகார் மற்றும் 2022 பொதுக்குழு முடிவுகளை எதிர்த்த புகார் தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்தில் இறுதி விசாரணை நடத்துகிறது.
அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தில் இறுதி உத்தரவு விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளது.
பாதுகாப்பிற்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் தொடங்கியது
பாதுகாப்பிற்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் தாக்குதல் தொடர்பான விசாரணை குறித்த விவரங்களை நாடாளுமன்றக் குழு முன்பாக தாக்கல் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்த திட்டமிட்டுள்ளன.