ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிப்பு

இன்றைய தினம் ஒகேனக்கல் காவிரிக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 34,000 கன அடியாக உயர்ந்துள்ளது.;

Update:2025-10-23 13:12 IST

தர்மபுரி,

வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வருகிறது. இதனிடையே தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.

இந்த நிலையில் மீண்டும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்றைய நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில், இன்றைய தினம் ஒகேனக்கல் காவிரிக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 34,000 கன அடியாக உயர்ந்துள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பால் மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தை காவிரி நுழைவிடமான தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர். நீர்வரத்து அதிகரித்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் அருவிகளில் நேற்று சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்றைய தினமும் ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்