நேட்டோ குறித்து சர்ச்சை பேச்சு: டிரம்ப் மன்னிப்பு கேட்க இங்கிலாந்து பிரதமர் வலியுறுத்தல்
ஆப்கானிஸ்தான் போரில் இங்கிலாந்து ராணுவ வீரர்கள் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.;
லண்டன்,
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் 2வது முறையாக பதவியேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, பல்வேறு நாடுகள் மீது அதிரடியாக வரி விதித்து வருகிறார்.
மேலும், டென்மார்க் நாட்டின் அங்கமாக உள்ள கிரீன்லாந்தை கைப்பற்ற டிரம்ப் திட்டமிட்டுள்ளார். கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றவில்லையென்றால் சீனா, ரஷியா கைப்பற்றிவிடும் என அவர் கூறி வருகிறார். ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் உலக அமைதிக்கு கிரீன்லாந்து தங்கள் வசம் இருப்பது முக்கியம் என்று டிரம்ப் கூறி வருகிறார். மேலும், இந்த நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கவில்லையென்றால் கூடுதல் வரிவிதிப்பேன் என்று ஐரோப்பிய நாடுகளை டிரம்ப் மிரட்டி வருகிறார். டிரம்ப்பின் பேச்சுக்கு ஐரோப்பிய யூனியனில் இடம்பெற்றுள்ள நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இதனிடையே, சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக வர்த்தக மன்ற மாநாட்டில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், நேட்டோ அமைப்பில் அமெரிக்காவை தவிர பிறநாடுகளின் படைகள் முக்கிய பங்காற்றவில்லை என கூறினார். மேலும், ஆப்கானிஸ்தான் போரில் முன்களத்தில் அமெரிக்க படையினரே இருந்தனர், பிற நாடுகளின் படையினர் முன்களத்தில் இல்லை என்று கூறினார்.
நேட்டோ அமைப்பில் பிற நாடுகளை நாம் (அமெரிக்கா) சார்ந்திருக்கவில்லை. அவர்கள் நமக்கு தேவையுமில்லை. ஆப்கானிஸ்தானுக்கு படைகளை அனுப்பினோம் என்று அவர்கள் (நேட்டோ அமைப்பின் பிற நாடுகள்) கூறுவார்கள். அவர்கள் அனுப்பினார்கள்... ஆனால், அவர்களின் படைகள் போர் களத்தில் முன்களத்தில் இல்லை. அமெரிக்க படையினரே முன்களத்தில் இருந்தனர்’ என்று டிரம்ப் கூறினார்
இந்நிலையில், டொனால்டு டிரம்ப்பின் பேச்சு நேட்டோ மட்டுமின்றி தங்கள் நாட்டையும் அவமதிப்பதாக உள்ளதாகவும், இதற்கு டிரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை கடந்த 2001ம் ஆண்டு போர் தொடுத்தது. இந்த போரில் நேட்டோ அமைப்பில் இருந்த பல்வேறு நாடுகள் பங்கேற்றன. இங்கிலாந்து ராணுவ வீரர்கள் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் ஆப்கானிஸ்தான் போரில் பங்கேற்றனர். இந்த போரில் இங்கிலாந்து ராணுவ வீரர்கள் 457 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.