தனுசு - தமிழ் மாத ஜோதிடம்


தனுசு - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 14 March 2023 6:45 PM GMT (Updated: 14 March 2023 6:45 PM GMT)

பங்குனி மாத ராசி பலன்கள் 15-03-2023 முதல் 13-04-2023 வரை

எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றிபெறும் தனுசு ராசி நேயர்களே!

பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு, சூரியன் மற்றும் புதனுடன் இணைந்து சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். தொழிலில் கூடுதல் வளர்ச்சி ஏற்படும். கடுமையாக உழைத்தும் பலன் கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்டவர்கள், இப்பொழுது மகிழ்ச்சிக் கடலில் மிதக்கப் போகிறார்கள். கூர்ந்த மதி கொண்டு குறிக்கோளை அடையும் உங்களுக்கு, தீர்த்த யாத்திரைகளிலும், தெய்வ தரிசனங்களிலும் கவனத்தைச் செலுத்த வாய்ப்பு உருவாகும்.

இம்மாதம் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியைப் பார்ப்பதால், பங்குனி 14-ந் ேததி வரை 2-ம் இடம் வலுவிழக்கின்றது. எனவே கொடுத்த வாக்கைக் காப்பாற்ற பெரும் முயற்சி எடுக்கும் சூழ்நிலை உருவாகும். குடும்ப ரகசியங்களை மூன்றாம் நபரிடம் சொல்வதன் மூலம், அமைதி குறையலாம். பிள்ளைகளின் எதிர்பார்ப்பு கள் அதிகரிக்கும். செய்தொழிலில் வரும் லாபம் ஏட்டில் இடம் பெற்றிருக்கும். ஆனால் எளிதில் கைக்கு கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

மேஷ - புதன்

பங்குனி 15-ந் தேதி உங்கள் ராசிக்கு 7, 19 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு செல்கிறார். இக்காலம் ஒரு பொற்காலமாகும். இல்லற வாழ்க்கை இனிதாக நடைபெறும். வாசல் தேடி வந்த வரன்கள் வந்த வழியே திரும்பாமல் நல்லபடியாக முடியும் விதத்தில் நம்பிக்கை அளிக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் இருந்த தொல்லைகள் அகலும். வழிகாட்டும் நல்லவர்கள் மூலம் வருமானம் குவியும். சிந்தனைகளைச் செயல்படுத்தி சிறப்பான வாழ்வை அமைத்துக்கொள்வீர்கள். பிள்ளைகளின் மேற்படிப்பு மற்றும் கல்யாணக் கனவுகளை நனவாக்க நல்லவிதமாக எடுத்த முயற்சி கைகூடும்.

ரிஷப - சுக்ரன்

பங்குனி 24-ந் தேதி ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதி சுக்ரன் ஆவார். சுக்ர பலம் நன்றாக இருந்தால் அக்கறை செலுத்தாத காரியங்களில் கூட ஆதாயம் கிடைக்கும் என்பார்கள். அந்த அடிப்படையில் எடுத்த காரியங்கள் கச்சிதமாய் முடியும். பொய் வைத்த நெஞ்சினரை புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். துன்பங்கள் தூளாகும். விரும்பிய வேலை கிடைக்கும். தொழில் புரிய நினைப்பவர்களுக்கு பங்குதாரர்கள் வந்திணைந்து பக்குவமாகச் செயல்படுவர்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ்கொடி பறக்கும் நேரம் இது. மக்கள் மனதில் மகத்தான இடம்பிடிப்பீர்கள். வியாபாரம், தொழிலில் உள்ளவர்கள் அரசாங்க அனுகூலத்தோடு ஆதாயம் பெறுவர். கலைஞர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் உண்டு. மாணவ - மாணவி களுக்கு கல்வி மேம்பாடு அதிகரிக்கும். கச்சிதமாகப் படித்து பிறர் மெச்சும் அளவிற்கு உயர்வர். பெண்களுக்கு மணமாலை சூடும் வாய்ப்பு உருவாகும். மழலை இல்லாத தம்பதியர்களுக்கு, அதற்காக எடுத்த மருத்துவம் கைகொடுக்கும். உறவினர் பகை மாறும். உதிரி வருமானம் வந்து சேரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மார்ச்: 18, 19, 22, 23, ஏப்ரல்: 2, 3, 4, 7, 8.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.


Next Story