நிறைய பேர் பாலியல் தொல்லை அளித்திருக்கின்றனர் - "அரபிக்குத்து" பாடகி

இந்தியத் திரையுலகின் முன்னணி பாடகிகளில் ஒருவரான ஜொனிதா காந்தி, சமூக வலைத்தளங்களில் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
ஏ.ஆர்.ரகுமானின் மேடை கச்சேரிகள் என்றாலும் சரி, அனிருத் பாடல்கள் என்றாலும் சரி தவறாமல் இடம் பிடித்து விடுபவர் ஜொனிதா காந்தி. இவர் தமிழில் 'காப்பான்' படத்தில் 'ஹே ஹமிகோ...', 'காற்று வெளியிடை' படத்தில் 'அழகியே...', 'டாக்டர்' படத்தில் 'செல்லம்மா... செல்லம்மா...', 'பீஸ்ட்' படத்தில் 'அரபி குத்து' உள்பட பல பாடல்களை பாடியுள்ளார்.. தற்போது திரைப்பட பாடல்களுடன், உலக அளவில் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில், தனது கசப்பான அனுபவங்களை ஜொனிதா பகிர்ந்து கொண்டார். "ஒருமுறை இன்ஸ்டாகிராமில் என் நண்பர்களின் பதிவுகளை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு ஸ்டோரியைக் கண்டேன். அதில் ஒரு ஆண் தனது அந்தரங்க பகுதியை வெளிப்படையாக பகிர்ந்து, அதன் பின்னணியில் என் புகைப்படத்தை வைத்திருந்தார். இது எனக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. இதுபோன்றவர்களை நான் உடனடியாக முடக்கிவிடுவேன். இத்தகைய சம்பவங்களை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்பதால், யாரும் மீது வழக்கு தொடரவில்லை. ஆனால், இவை அனைத்தும் பாலியல் சீண்டல்கள்தான். இதுபோல பலர் எனக்கு தொல்லை கொடுத்துள்ளனர்" என்று ஜொனிதா காந்தி வேதனையுடன் தெரிவித்தார்.






