நடிகை ஷில்பா ஷெட்டியின் கேளிக்கை விடுதியில் சோதனை- முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக பரபரப்பு

ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான கேளிக்கை விடுதியில் மும்பையை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.
நடிகை ஷில்பா ஷெட்டியின் கேளிக்கை விடுதியில் சோதனை- முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக பரபரப்பு
Published on

பெங்களூரு,

பெங்களூரு எம்.ஜி. ரோடு அருகே சர்ச் தெருவில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான பாஸ்டியன் பப் என்ற கேளிக்கை விடுதி உள்ளது. இந்த கேளிக்கை விடுதியில் கடந்த 11-ந்தேதி நள்ளிரவில் பிக்பாஸ் போட்டியாளரும், தொழில்அதிபருமான சத்யா நாயுடு தனது நண்பர்களுடன் சென்றிருந்தார். பின்னர் கட்டணம் கொடுக்கும் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் கேளிக்கை விடுதி ஊழியர்களை சத்யா நாயுடு, அவரது நண்பர்கள் தாக்கியதாக கூறப்பட்டது.

இதுதொடர்பாக கப்பன்பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்தநிலையில், நேற்று காலையில் ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான கேளிக்கை விடுதியில் மும்பையை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். வருமான வரியை சரியாக செலுத்தாமலும், வரி ஏய்ப்பு செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அதிகாரிகள் கேளிக்கை விடுதியில் சோதனை மேற்கொண்டது தெரியவந்துள்ளது. பின்னர் கேளிக்கை விடுதியில் உள்ள ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் பரிசீலனை நடத்தினர்.

கேளிக்கை விடுதியின் வருவாய், அவர்கள் எவ்வளவு வருமான வரி செலுத்தி உள்ளார்கள் என்பது பற்றிய தகவல்களை நிர்வாகிகளிடம் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்டு பெற்றுக் கொண்டனர். பல மணிநேர சோதனைக்கு பின்பு கேளிக்கை விடுதியில் இருந்து முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அதனை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com