ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்தா? அபிஷேக் பச்சன் பதிலடி

தனது குடும்பம் பற்றி பொய்யானவிஷயங்களைப் பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்று அபிஷேக் பச்சன் பேசியிருக்கிறார்.
நடிகை ஐஸ்வர்யா ராயும், நடிகர் அபிஷேக் பச்சனும் காதலித்து கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். சில ஆண்டுகளாக அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் திருமண வாழ்க்கையில் பிரச்னை இருப்பதாகவும் விரைவில் இருவரும் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபிஷேக் பச்சன் “நானும் ஐஸ்வர்யா ராயும் திருமணம் செய்துகொள்ளும் முன்பு, எங்கள் திருமணம் எப்போது என்பதை அவர்களே முடிவு செய்தார்கள். திருமணம் முடிந்த பிறகு, எப்போது விவாகரத்து செய்வோம் என்பதையும் அவர்களே முடிவு செய்கிறார்கள். இது முட்டாள்தனமானது. எங்கள் இருவருக்கும் உண்மை என்னவென்று தெரியும். நாங்கள் மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக இருக்கிறோம். அதனால் இதுபோன்ற வதந்திகள் எங்களைப் பாதிப்பதில்லை. அதேநேரம் என்னையும் என் குடும்பம் பற்றியும் பொய்யான, முட்டாள்தனமான விஷயங்களைப் பேசுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது” என்று காட்டமாகப் பேசியிருக்கிறார்.






