ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு.. அமலாக்கத்துறைக்கு விதித்த தடையை நீக்க ஐகோர்ட்டு மறுப்பு

ஆகாஷ் பாஸ்கரன் மீதான நடவடிக்கைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க வேண்டும் என அமலாக்கத் துறை தரப்பில் ஐகோர்ட்டில் கோரிக்கை வைத்திருந்தனர்.
சென்னை,
டாஸ்மாக் நிர்வாகத்தில் சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக கூறி கடந்த மார்ச் மாதம், சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இந்த நடவடிக்கைக்கு எதிராக அவர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்தது.
இந்தநிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆகாஷ் பாஸ்கரன் மீதான நடவடிக்கைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க வேண்டும் என அமலாக்கத் துறை தரப்பு வக்கீல் என்.ரமேஷ் கோரிக்கை விடுத்தார்.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதாக கூறிய நீதிபதிகள், தடையை நீக்க மறுத்து விட்டனர். பின்னர், விசாரணையை அடுத்த மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.






