பெண்மையை இழிவு படுத்தியதாக புகார் எதிரொலி: சினிமா இயக்குனர் மீது வழக்கு பதிவு

திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் போலீசார், குஞ்சு முகமது மீது ஜாமீன் இல்லாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
பெண்மையை இழிவு படுத்தியதாக புகார் எதிரொலி: சினிமா இயக்குனர் மீது வழக்கு பதிவு
Published on

திருவனந்தபுரம்,

திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள 30-வது சர்வதேச கேரள திரைப்பட விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் கடந்த 2 வாரங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வும், இயக்குனருமான பி.டி.குஞ்சு முகமது பங்கேற்றார். மேலும் திரைப்படத்துறையை சேர்ந்த பல்வேறு இயக்குனர்கள் மற்றும் கேரள சினிமா அக்காடமியை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பெண்மையை இழிவுபடுத்தும் வகையில் குஞ்சு முகமது நடந்து கொண்டதாக பெண் இயக்குனர் ஒருவர் முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் போலீசார், குஞ்சு முகமது மீது ஜாமீன் இல்லாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இதுதொடர்பாக குஞ்சு முகமது கூறுகையில், நான் பெண்களுக்கு பிரச்சினை என்றால் அவர்களுக்கு ஆதரவாக முன்னின்று செயல்பட்டு வருகிறேன். பெண்மையை இழிவு படுத்தும் வகையில் ஒரு போதும் நடக்கவில்லை. அந்த குறிப்பிட்ட பெண் இயக்குனர் என் மீது தவறான புரிதலுடன் இருந்து இருக்கலாம். இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்கவும் தயாராக இருக்கிறேன் என்றார்.

இதற்கிடையே காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராகுல் மாங் கூட்டத்திற்கு எதிராக பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், குஞ்சு முகமது மீது வழக்குப்பதிவு செய்ய தாமதம் செய்தது ஏன் என எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com