சென்சார் சான்றிதழ் வாங்க பயத்துடன் போனேன்!- இயக்குனர் மாரி செல்வராஜ்

சென்சார் சான்றிதழ் வாங்க போகும்போது எந்த காட்சியை தூக்கப்போறாங்களோ என்ற பயத்துடன் போனேன் என்று மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.
சென்னை,
பரியேறும் பெருமாள், மாமன்னன், கர்ணன், வாழை ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் பைசன். இதில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார். அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தினை பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இந்த படம் சாதியை ஏற்றத்தாழ்வுகளை ஒதுக்கிவிட்டு எல்லோரும் ஒன்றாக சமமாக வாழ்வோம் என்கிற கருத்தை பேசுகிறது.
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் மாரி செல்வராஜ் பைசன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வாங்கிய அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதாவது, " நான் பைசன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் வாங்க போகும்போது எந்த காட்சியை தூக்கப்போறாங்களோ என்ற பயத்துடன் போனேன்; ஆனால், அங்க போனதும் சென்சார் குழு வெறும் மூன்று வார்த்தையை மட்டுமே மியூட் (mute) பண்ண சொன்னது. நல்ல படம், ஊக்கமளிக்கும் வகையில் இருந்தது என்று பாராட்டியது" என்று கூறியுள்ளார்.






