“காந்தா” படம் உங்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் - துல்கர் சல்மான்

துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ நடித்துள்ள ‘காந்தா’ படம் வரும்14-ம் தேதி வெளியாக உள்ளது.
செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் ‘காந்தா’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் 'மிஸ்டர் பச்சன்' திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ , துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். வேபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ராணா டகுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது.
இது மறைந்த நடிகர் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கைக் கதையாக உருவாகியுள்ளது. துலகர் சல்மான் தயாரித்த லோகா திரைப்படம் வெற்றி நடைபோட்டுக்கொண்டிருந்ததால் காந்தா படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. காந்தா படத்தின் டிரெய்லர் வெளியானது. இதில் துல்கர் சல்மானின் வித்தியாசமான நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

காந்தா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள். இந்த விழாவில் துல்கர் சல்மான் பேசும் போது, “இக்கதையை 2019ல் தான் கேட்டேன். தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இயக்குநர் செல்வா இருப்பார். சினிமாவை அவ்வளவு ரசிப்பார். இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசையாக காத்திருந்தேன். எங்கள் எல்லோருக்கும் தமிழில் மிக முக்கியமான படமாக ‘காந்தா’இருக்கும். ‘அய்யா’ கதாபாத்திரத்திற்கு மிகப்பொருத்தமான நபராக சமுத்திரக்கனி இருந்தார். எங்களை விட இன்னும் அதிக ஆர்வமாக சமுத்திரக்கனி இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தார். அவருடன் இணைந்து இன்னும் நிறைய படங்கள் நடிக்க வேண்டும்.
குமாரி கதாபாத்திரத்திற்காக தமிழ் கற்றுக் கொண்டு முழு ஈடுபாட்டோடு பாக்யஸ்ரீ நடித்திருக்கிறார். ராணாவும் நானும் இணைந்து இந்தப் படம் செய்திருப்பது மகிழ்ச்சி. படம் நன்றாக வர வேண்டும் என்று ராணா முழு உழைப்பைக் கொடுப்பார். டைம் டிராவல் செய்வது போன்ற மகிழ்ச்சியை இந்த பீரியட் படங்கள் கொடுக்கும். மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்தப் படத்திற்கு சிறப்பாக உழைத்துள்ளனர். படம் பார்க்கும் அனைவருக்கும் இது மறக்க முடியாத படமாக இருக்கும்.
காந்தா படத்தின் பணியாற்றியவர்களின் வாழ்க்கையில் இப்படம் ஒருமுறை மட்டுமே அமையும். அதனை நாங்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளோம்.தமிழ் சினிமாவின் வரலாறு கோடம்பாக்கத்தில் தொடங்கியது. அந்தக்கால சினிமா ஸ்டூடியோ கலாசாரங்களையும் அதன் கதைகளையும் அழகாக பதிவு செய்திருக்கிறோம். அதை நீங்கள் ரசிப்பீர்கள். இப்படம் உங்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். அந்த கால படங்களில் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார் . காந்தா திரைப்படம், வரும் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.






