கவிஞர் சினேகனின் தந்தை மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

கவிஞர் சினேகனின் தந்தை சிவசங்குவின் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 'புத்தம் புது பூவே' என்ற படத்தின் மூலம் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமானவர் சினேகன். இவர் இதுவரை 2500-க்கும் அதிகமான பாடல்களை எழுதி உள்ளார். கவிஞர் மட்டுமின்றி, நடிகர், அரசியல்வாதி என பன்முகங்களை கொண்டவர்.
இந்த நிலையில், கவிஞர் சினேகனின் தந்தை சிவசங்கு (வயது 101) வயது மூப்பின் காரணமாக இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலமானார். அவரது உடல் நாளை காலை 11 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புதுக்கரியப்பட்டியில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், கவிஞர் சினேகனின் தந்தை மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "என்னுடைய அன்புக்குரிய தம்பியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளருமான கவிஞர் சினேகன் அவர்களது தந்தையார் சிவசங்கு அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். தம்பி சினேகனுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்." என்று பதிவிட்டுள்ளார்.






