திருவண்ணாமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டதால் பக்தர்கள் சிரமமின்றி வரிசையில் சென்று தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்கள் மற்றும் விஷேச நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.
அதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. பக்தர்கள் நீண்ட வரிசையில் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் பக்தர்கள் ராஜகோபுரம் வழியாகவும், அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும் தரிசனத்திற்கு உள்ளே சென்றனர்.
பக்தர்களின் கூட்டமானது அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயிலுக்கு வெளியே வட ஒத்தவாடை தெரு வழியாக நீண்டு இரட்டை பிள்ளையார் கோவில் தெரு மற்றும் தேரடி வீதி வரையில் நீண்டு காணப்படுகிறது. வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டதால் பக்தர்கள் எந்தவித சிரமமின்றி வரிசையில் சென்று தரிசனம் செய்தனர். வரிசையில் வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் மூலம் மோர் மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டது.