தூத்துக்குடியில் தசரா பண்டிகை: காளி வேடம் அணிந்த பக்தர்கள் ஊர்வலம்

ஊர்வலம் பாளையங்கோட்டை ரோடு, வி.வி.டி சந்திப்பு, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சிவன் கோவில் முன்பு முடிவடைந்தது.
தூத்துக்குடியில் ஆண்டு தோறும் ருத்ர தர்ம சேவா அமைப்பு சார்பில் தசரா பண்டிகையை முன்னிட்டு காளி ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான காளி ஊர்வலம் நேற்று மாலை தூத்துக்குடி வேம்படி இசக்கியம்மன் கோவில் முன்பு இருந்து தொடங்கியது. ஊர்வலத்துக்கு ருத்ர தர்ம சேவா தா.வசந்தகுமார் தலைமை தாங்கினார். கன்னியாகுமரி மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் சுபா.முத்து முன்னிலை வகித்தார். வீரவநல்லூர் குலசேகர மடம் ராமஅபரமேய ராமனுஜ ஜீயர் ஆசி வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
ஊர்வலத்தில் பல்வேறு விதமான காளி வேடம் அணிந்த பக்தர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர். மேலும் 21 தீச்சட்டிகள் ஏந்திய பக்தர்கள், பறவைக்காவடி எடுத்த பக்தர்கள், 10, 11, 15 அடி நீள அலகு குத்திய பக்தர்கள், மாவிளக்கு ஏந்திய பெண்கள் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் பாளையங்கோட்டை ரோடு, வி.வி.டி சந்திப்பு, காய்கறி மார்க்கெட் சந்திப்பு, பழைய பஸ் நிலையம், குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சிவன் கோவில் முன்பு முடிவடைந்தது.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நீங்கிட வேண்டி திரிசூலம் ஏந்தி 108 பெண்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர். சுவாமி மற்றும் அம்பாளின் பிரமாண்ட திருவுருவ அலங்கார ஊர்திகளும் ஊர்வலத்தில் அணிவகுத்தன. தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நிகழ்ச்சியில் மாநில சித்தர் பேரவை அண்ணாமலை சித்தர், பூசாரி பேரவை சாஸ்தா மற்றும் இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






