வேண்டுதல் நிறைவேற முருகனுக்கு மிட்டாய் நைவேத்தியம்


குழந்தைகளுக்கு பிடித்தமான மிட்டாய்களை வாங்கி கோவிலில் உள்ள மரத்தில் ஒட்டி, வேண்டுதலை நிறைவேற்றும்படி வணங்கி செல்கின்றனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் அமைந்துள்ளது, குழந்தை வேலப்பர் கோவில். குழந்தை வடிவில் கையில் வேலுடன் காட்சி அளிப்பதால் இங்குள்ள முருகனுக்கு, 'குழந்தை வேலப்பர்' என்று பெயர். இவர் 'மிட்டாய் முருகன்' என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறார். பொதுவாக, தேர்வில் வெற்றி பெற்றவர்களோ அல்லது ஏதாவது சுப நிகழ்வை கொண்டாட நினைப்பவர்களோ, மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக உறவினர் மற்றும் நண்பர்களுக்கு மிட் டாய் வாங்கி கொடுப்பது வழக்கம். ஆனால் அதுபோன்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மக்கள், இந்த குழந்தை வேலப்பருக்கும் மிட்டாய் கொடுத்து வழிபடும் வித்தியாசமான நடைமுறை உள்ளது.

ஒரு சமயம் பக்தர் ஒருவர் தனக்கு குழந்தை வரம் வேண்டி, இத்தலத்துக்கு வந்து குழந்தை வேலப்பரை மனமுருக பிரார்த்தனை செய்துள்ளார். அவருடைய வேண்டுதல் நிறைவேறியதும், இங்கு வந்து முருகனை வணங்கிவிட்டு, தன்னுடைய உறவினர்களுக்கு மிட்டாய் கொடுத்து மகிழ்ந்துள்ளார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய முருகன், “எனக்கு மட்டும் ஏன் மிட்டாய் தரவில்லை” என்று கேட்டுள்ளார். உடனே அந்த பக்தர் கோவிலுக்கு விரைந்து வந்து, முருகனுக்கு மிட் டாய்களை வழங்கினார். அன்றிலிருந்து இங்கிருக்கும் முருகனுக்கு மிட்டாய் கொடுத்து வழிபடும் நடைமுறை ஏற்பட்டது.

குழந்தைகளுக்கு பிடித்தமான மிட்டாய்களை வாங்கி கோவிலில் உள்ள மரத்தில் ஒட்டி, வேண்டுதலை நிறைவேற்றும்படி வணங்கி செல்கின்றனர். திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற வேண்டுதல்களுடன் வரும் பக்தர்கள், குழந்தை வேலப்பருக்கு மிட்டாய்களை நைவேத்தியமாகச் செலுத்துகின்றனர். முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை அன்று, குழந்தை வேலப்பருக்கு செந்நிற வஸ்திரம் சாத்தி, செவ்வரளி மாலை அணிவித்து, நெய் தீபமேற்றி வைத்து, மிட்டாய் அல்லது சாக்லேட் சமர்ப்பித்து பிரார்த்தனை செய்தால், கல்வியில் ஏற்படும் தடை நீங்கும், தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், குழந்தை வேலப்பரை தரிசித்து, மிட்டாய் வழங்கிவிட்டே பழனிக்குச் செல்கின்றனர். திண்டுக்கல்லில் இருந்து பழனி செல்லும் வழியில் சுமார் 38 கி.மீ. தொலைவில் ஒட்டன்சத்திரம் உள்ளது. இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவு பயணித்தால், குழந்தை வேலப்பர் கோவிலை அடையலாம்.

1 More update

Next Story