கார்த்திகை மாத பிறப்பு: பழனி மலைக்கோவிலில் சிறப்பு வழிபாடு

வெள்ளி கவச அலங்காரத்தில் ஆனந்த விநாயகர்
பழனி முருகன் கோவிலில் உள்ள ஆனந்த விநாயகர் சன்னதியில் தமிழ் மாதப் பிறப்பையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தமிழ்மாத பிறப்பு, கிருத்திகை நாட்களில் வெளியூர், வெளிமாநில பக்தர்கள் திரளாக வந்து தரிசனம் செய்கின்றனர். அதன்படி இன்று கார்த்திகை மாதப்பிறப்பு என்பதால் பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மேலும் கார்த்திகை மாதப்பிறப்பு என்பதால் அய்யப்ப பக்தர்கள், பழனி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். அதோடு பழனி அடிவாரம் பாதவிநாயகர் கோவில், திருஆவினன்குடி கோவில், அய்யப்பன் கோவில் ஆகிய இடங்களில் அய்யப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
பழனி முருகன் கோவிலில் உள்ள ஆனந்த விநாயகர் சன்னதியில் தமிழ் மாதப்பிறப்பையொட்டி சிறப்பு யாகம், பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி கார்த்திகை மாதப்பிறப்பையொட்டி இன்று சிறப்பு யாகம், பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






