மகாளய அமாவாசை.. எந்த பொருளை தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?


மகாளய அமாவாசை.. எந்த பொருளை தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?
x
தினத்தந்தி 12 Sept 2025 2:38 PM IST (Updated: 12 Sept 2025 4:35 PM IST)
t-max-icont-min-icon

வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் பசுவிற்கு உணவளிப்பதன் மூலம் தானத்துக்குரிய எல்லா பலன்களையும் பெற முடியும்.

இந்து வழிபாட்டில் பித்ரு வழிபாடு என்பது முக்கியமான வழிபாடாக கருதப்படுகிறது. மறைந்த முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தி, அவர்களின் ஆத்மா சாந்தியடையவும், அவர்களது ஆசிகளைப் பெறவும் செய்யப்படும் ஒரு வழிபாடு ஆகும். குறிப்பாக ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை போன்ற நாட்களில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் பித்ரு தோஷம் நீங்கும் என்று நம்பப்படுகிறது.

அவ்வகையில் மகாளய அமாவாசை நாளில் செய்யும் சிறு தானமும், முன்னோர்களின் பசியை தீர்த்து அவர்களின் ஆசியை வழங்கும் என்பது நம்பிக்கை. இத்தகைய சிறப்பு மிக்க அமாவாசை திருநாளில் எந்தெந்த பொருட்களை தானம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ற விபரம் வருமாறு:-

பொருட்கள் பலன்கள்
அன்னம் வறுமையும், கடனும் நீங்கும்
துணி ஆயுள் அதிகமாகும்
தேன் புத்திர பாக்கியம் உண்டாகும்
தீபம் கண்பார்வை தெளிவாகும்
அரிசி பாவங்களை போக்கும்
நெய் நோய்களை போக்கும்
பால் துக்கம் நீங்கும்
தயிர் இந்திரிய சுகம் பெருகும்
பழங்கள் புத்தியும், சித்தியும் உண்டாகும்
தங்கம் குடும்ப தோஷங்களை நீக்கும்
வெள்ளி மனக்கவலை நீங்கும்
பசு ரிஷி, தேவர், பிதுர் கடன்கள் அகலும்
தேங்காய் நினைத்த காரியம் வெற்றியாகும்
நெல்லிக்கனி ஞானம் உண்டாகும்
பூமி தானம் ஈஸ்வர தரிசனம் உண்டாகும்

சிலருக்கு பொருள் வசதி குறைவாக இருக்கும். அவர்களால் பெரிய அளவில் தானம் செய்ய இயலாது. அவர்கள் கவலை கொள்ள வேண்டாம். பசுவிற்கு உணவளிப்பதன் மூலம் தானத்துக்குரிய எல்லா பலன்களையும் பெற முடியும். கன்றுடன் கூடிய பசுவிற்கு தானம் அளித்தல் மிகவும் நல்லது. பசுவிற்கு அருகம்புல் அளிக்கலாம். அகத்தி கீரையை உணவாக அளிக்கலாம். பசுவிற்கு வாழையிலையில் சாதத்தை அளிக்கலாம். பழவகைகளை கொடுக்கலாம்.

பழங்களில் வாழைப்பழம் மிகச் சிறந்தது. ஆறு மஞ்சள் வாழைப்பழங்களை பசுவிற்கு உணவாக அளிக்கலாம். அரிசியும், வெல்லமும் கலந்து ஒரு பாத்திரத்தில் பசுவிற்கு உணவாக அளிக்கலாம். இதை அதிகமாக தரக்கூடாது. பசுவிற்கு வயிற்று உபாதையை உண்டாக்கும். கோமாதா என்றழைக்கப்படும் பசுவின் உடலில் அனைத்து தெய்வங்களும், தேவதைகளும் வாசம் செய்வதாக புராணங்கள் கூறுகின்றன.

அந்த வகையில் பசுவுக்கு உணவளித்தால் அனைத்து தெய்வங்களுக்கும், தேவதைகளுக்கும் உணவளித்ததாகவே சமம் என கருதப்படுகிறது.

1 More update

Next Story