மங்கை மடம் யோகநாத சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து சுவாமி, அம்பாள், பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு அருகே மங்கைமடம் கிராமத்தில் யோகாம்பாள் சமேத யோகநாத சுவாமி கோவில் உள்ளது. திருவெண்காட்டில் மருத்துவாசுர சம்ஹாரத்திற்கு பிறகு யோகீஸ்வரம் என்று போற்றப்படும் இந்த கோவிலில், மேற்கு நோக்கி சுவாமி, அம்பாள் மற்றும் தட்சிணாமூர்த்தி மூவரும் யோக நிலையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் வழங்குவதாக ஐதீகம்.
இங்கு வந்து சுவாமி, அம்பாள் மற்றும் தட்சிணாமூர்த்தியை தரிசிப்போருக்கு அமைதியான வாழ்க்கை கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் (குடமுழுக்கு) செய்ய தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு, கடந்த 30ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. 31ஆம் தேதி யாகசாலை பிரவேசம் செய்யப்பட்டு, தொடர்ந்து பூஜைகள் நடைபெற்றன. இன்று காலையில் யாகசாலை பூஜைகள் நிறைவடைந்தன. தொடர்ந்து பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து 9.30 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது. தொடர்ந்து மங்கள மற்றும் சிவவாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி சுவாமி, அம்பாள், தட்சிணாமூர்த்தி மற்றும் பரிவார மூர்த்திகளின் விமான கலசங்களுக்கு ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
சர்வ சாதகம் ராமகிருஷ்ணன் சிவாச்சாரியார் தலைமையிலானோர் யாகசாலை பூஜைகள் மற்றும் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
பின்னர் சுவாமி, அம்பாள், பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். திருவெண்காடு போலீசார் மற்றும் பூம்புகார் தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






