வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாத சிறப்பு பூஜைகள்

வெள்ளிக்கவச அலங்காரத்தில் சுவாமி- அம்பாள்
மார்கழி மாத சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மார்கழி மாதம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் மார்கழி மாதம் இன்று பிறந்துள்ள நிலையில், கோவில்களில் காலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுக்கா, வள்ளிமலையில் உள்ள சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் மார்கழி பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர்.
மலைக்கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, மலை அடிவாரத்தில் தனி சன்னதியில் வீற்றிருக்கும் வள்ளியம்மை மற்றும் கீழ் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத ஆறுமுக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டது.
முருகப்பெருமானுக்கு உகந்த தினமான செவ்வாய்க்கிழமை மற்றும் மார்கழி மாதத்தின் முதல் நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து வழிபட்டனர். பலர் வெற்றிலையில் அகல் விளக்கு ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.






