பௌர்ணமி சிறப்பு பூஜைகள்: ஓசூர் பிரத்தியங்கிரா தேவி கோவிலில் மிளகாய் வத்தல் யாகம்

பௌர்ணமியை முன்னிட்டு பிரத்தியங்கிரா தேவி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மோரனப்பள்ளி கிராமத்தில் உள்ள ஸ்ரீ ராகு, கேது அதர்வண மகா பிரத்தியங்கிரா தேவி கோவிலில் ஆவணி மாத பவுர்ணமி நாள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதன் ஒரு பகுதியாக ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ராகு கேது ப்ரீத்தி வழிபாடுகள் நடத்தினர். பின்னர் மிளகாய் வத்தல் யாகம் நடைபெற்றது. இதில், வேத மந்திரங்கள் முழங்க மிளகாய் வத்தலை பிரம்மாண்ட வேள்வி குண்டத்தில் பக்தர்கள் செலுத்தி சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர், யாகத்தில் மகா பூர்ணாஹுதி சமர்ப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மூலவர் மகா பிரத்தியங்கிரா தேவி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தங்க கவசம் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. அம்மனுக்கு பஞ்சமுக தீபாராதனை செய்யப்பட்டது.
பின்னர் கோவிலில் தனி சன்னிதிகளாக உள்ள கால பைரவர் மற்றும் ஸ்ரீ ராகு, ஸ்ரீ கேது பகவான் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு பூஜைகளும் நடைபெற்றன.
இந்த வழிபாடுகளில் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.






