சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


சிவன் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக, ஆராதனைகளில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆடி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. குறிப்பாக, நந்தியம் பெருமானுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை மூன்று முறை வலம் வந்தார். அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரமேஸ்வரர், நந்தியம் பெருமான், பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பரமத்தி வேலூர்

அதேபோல் பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் ஆலயத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில்,பரமத்தி வேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஸ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிலிக்கல்பாளையம் கரட்டூர் விஜயகிரி வடபழனியாண்டவர் கோயிலில் எழுந்தருளியுள்ள பருவதீஸ்வரர், வெங்கரை, ரகுநாதபுரம் காவிரி கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர், பரமத்தி வேலூர் வல்லப விநாயகர் கோயிலில் உள்ள விசாலாட்சி சமேத பானலிங்கவிஸ்வேஸ்வரர், வடகரையாத்தூர் சிவன் கோவில் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. விழாவில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

சேலம் சுகவனேஸ்வரர் கோவில்

சேலம் டவுனில் பழமை வாய்ந்த சுகவனேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை ஆடி மாத வளர்பிறை பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. இதில் மூலவர் சுகவனேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. மேலும் உற்சவர்கள் கோவிலுக்குள் உள் பிரகாரத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் கோவிலின் முன் மண்டபத்தில் வைத்து சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

வெள்ளகோவில்

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில், எல்.கே.சி நகர், புற்றிடம் கொண்டீஸ்வரர் கோவிலில் நேற்று மாலை பிரதோஷத்தையொட்டி சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

1 More update

Next Story