பிரதோஷ வழிபாடு: பரமத்திவேலூர் பகுதி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை

பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம்பெருமானுக்கும், சிவபெருமானுக்கும் பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. நந்தியம் பெருமானுக்கு 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தியம் பெருமான், பரமேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்கள் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
சிறப்பு பூஜையில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் கலந்து கொண்டு நந்தியம்பெருமான், பரமேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் பிலிக்கல்பாளையம் கரட்டூர் விஜயகிரி வட பழனியாண்டவர் கோவிலில் எழுந்தருளியுள்ள பருவதீஸ்வரர், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் ஆலயம், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவில், மாவுரெட்டி பீமேஸ்வரர் கோவில், பில்லூர் வீரட்டீஸ்வரர் கோவில், பொத்தனூர் காசி விஸ்வநாதர் ஆலயம், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர், வெங்கரை, ரகுநாதபுரம் காவிரி கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர், பரமத்தி வேலூர் வல்லப விநாயகர் கோவிலில் உள்ள விசாலாட்சி சமேத பானலிங்கவிஸ்வேஸ்வரர் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
விழாவில் அந்தப் பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.






