புரட்டாசி மாத வழிபாடுகளும் பலன்களும்..!

இறை வழிபாடு, சக்தி வழிபாடு, பித்ரு தேவதை வழிபாடு என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியிருப்பது புரட்டாசி மாதத்தின் தனிச்சிறப்பு.
புண்ணியம் தரும் புரட்டாசி மாதம் இன்று (17.92025) பிறந்துள்ளது. புரட்டாசி என்றாலே பெருமாள் வழிபாடுதான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் புரட்டாசியில் பெருமாளுக்கு இணையாக சிவபெருமானுக்கும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அம்மன், விநாயகர் வழிபாடு, பித்ருக்கள் வழிபாடும் நடத்தப்படும்.
புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும். புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை.
புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு தளிகை (படையல்) போடுவது வழக்கம். அனைத்து சனிக்கிழமைகளிலும் தளிகை போட முடியாதவர்கள் 1வது, 3வது சனிக்கிழமையில் போடுவார்கள். ஐந்து சனிக்கிழமைகள் வந்தால் ஐந்தாவது சனிக்கிழமையிலும் தளிகை போடலாம். பெருமாள் பாயாசப் பிரியர் என்பதால் பாயாசம் செய்வது முக்கியமானதாகும்.
ராகு, கேதுவால் ஜாதகத்தில் உள்ள காலசர்ப்ப தோஷம், நாகதோஷம், மாங்கல்ய தோஷம், தாரதோஷம் போன்ற பலசர்ப்ப சாப தோஷங்கள் யாவும் புரட்டாசி மாதம் கருட வழிபாடு செய்வதால் சூரியனைக் கண்ட பனிபோல் பறந்தோடும்.
ஜாதக அமைப்பின்படி சனி, புதன் திசை நடப்பவர்கள் நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபட தடைகள் அனைத்தும் நீங்கும். பாவங்கள் நீங்கி புண்ணியமும் சுபயோக சுபங்களும் கூடி வரும்.
புரட்டாசி மாதத்தில் திருவிழாக்கள் பல நடக்கும். திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே, பல பெருமாள் கோவில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் புரட்டாசி மாதம் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம்.
புரட்டாசி சனிக்கிழமையில்தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் உள்ளது.
புரட்டாசி சனிக்கிழமைகளில் கடன் கொடுப்பதையும, கடன் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். ஆனால் தர்மம் நிறையச் செய்யலாம். அன்றைய தினம் காகத்திற்கு அன்று ஆலிலையில் எள்ளும் வெல்லமும் கலந்த அன்னம் வைத்தால் சனிபகவானின் தாக்கம் நீங்கும். புரட்டாசி சனிக்கிழமையன்று சிவாலயங்களுக்குச் சென்று சனி பகவானை வழிபட்டு வணங்கினால், சனி தோஷம் நீங்கும்.
இறை வழிபாடு, சக்தி வழிபாடு, பித்ரு தேவதை வழிபாடு என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியிருப்பது புரட்டாசி மாதத்தின் தனிச்சிறப்பு. பித்ருக்களை வழிபடும் மஹாளயம், பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் நவராத்திரி இவையும் சேர்ந்து புரட்டாசிக்குப் பெருமை சேர்க்கிறது.
பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி. இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில்தான். ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு வேண்டிய பஜனைகள் பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. புதனுக்கு நட்பு கிரகம் சனிபகவான். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விஷேசமாக கொண்டாடப்படுகிறது.






