திருச்செந்தூர் கோவிலில் வசந்த திருவிழா தொடக்கம்: ஜூன் 9ம்தேதி வைகாசி விசாகம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வசந்த திருவிழா இந்த ஆண்டு சண்முகவிலாச மண்டபத்தில் தொடங்கியது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி வசந்த திருவிழாவை முன்னிட்டு, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. மதியம் உச்சிகால பூஜைக்குப் பிறகு, சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி சண்முகவிலாச மண்டபத்தைச் சேர்ந்தார்.
மாலையில் சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது. அதையடுத்து சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மேளதாளம் முழங்க, பக்தர்கள் கப்பல் பாடல்கள் பாட, மண்டபத்தை 11 முறை வலம் வந்தார் சுவாமி. பின்னர் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து 10-ம் நாளான ஜூன் 9-ம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது.
அதையொட்டி கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால அபிஷேகம், தீபாராதனைக்குப் பிறகு, சுவாமி ஜெயந்திநாதர் சண்முகவிலாச மண்டபத்தைச் சேர்கிறார். மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும். மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வருதலும், விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளித்தலும் நடைபெறும்.
பின்னர் மகா தீபாராதனை நடந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தேவசேனா அம்மனுடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். வழக்கமாக சித்திரை, வைகாசி வசந்த திருவிழா ராஜகோபுரம் எதிரேயுள்ள வசந்த மண்டபத்தில் நடைபெறும். இந்த ஆண்டு அதனருகே பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெற்றுவருவதால் இத்திருவிழா சண்முகவிலாச மண்டபத்தில் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.