திருவண்ணாமலை தீபத்திருவிழா: பந்தக்கால் நடப்பட்டது


திருவண்ணாமலை தீபத்திருவிழா:  பந்தக்கால் நடப்பட்டது
x
தினத்தந்தி 24 Sept 2025 9:59 PM IST (Updated: 25 Sept 2025 4:47 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

இக்கோவிலில் நடைபெறும் பல்வேறு விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் 10-ம் நாள் அதிகாலையில் கோவில் வளாகத்தில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.

அவ்வகையில் இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் மாதம் 3-ந்தேதி தேதி பரணி தீபமும், மகா தீபமும் ஏற்றப்படுகிறது. இவ்விழாவிற்கான பூர்வாங்க பணிகள் தொடங்குவதற்கான பந்தக்கால் முகூர்த்த விழா இன்று நடைபெற்றது. அதிகாலை சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து பந்தக்காலிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் பஞ்ச மூர்த்திகளின் தேர்கள் முன்பு பந்தக்கால் வைத்து பூஜை செய்யப்பட்டது. பின்பு ராஜகோபுரம் முன்பு சிவாச்சாரியார் பி.டி.சங்கர் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க பந்தக்கால் நடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கலெக்டர் தர்ப்பகராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, அருணாசலேஸ்வரர் கோவில் தக்கார் மீனாட்சி சுந்தரம், இணை ஆணையர் பரணிதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story