திருமலை தெப்போற்சவம்: ஸ்ரீவாரி புஷ்கரணியில் 5 முறை வலம் வந்து அருள்பாலித்த மலையப்ப சாமி


தினத்தந்தி 13 March 2025 3:11 PM IST (Updated: 13 March 2025 3:15 PM IST)
t-max-icont-min-icon

திருமலையில் நடைபெற்று வரும் தெப்போற்சவம் இன்றுடன் நிறைவுபெறுகிறது.

திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பால்குண மாதத்தில் சுத்த ஏகாதசி அன்று தொடங்கும் தெப்போற்சவம் பால்குண பவுர்ணமி நாளில் முடிவடைகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான தெப்போற்சவம் கடந்த 9-ம் தேதி தொடங்கியது.

கோவில் அருகில் உள்ள புண்ணியத் தீர்த்தமான ஸ்ரீவாரி புஷ்கரணியில் மிதக்கும் தெப்பத்தேரில் பகவான் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினமும் இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை நடைபெற்றது.

முதல் நாளில் ராமபிரான், சீதா தேவி, லட்சுமணர் ஆகியோர் தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 2-வது நாளில் கிருஷ்ணர், ருக்மணி தேவி தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

அதன்பின்னர் மூன்றாவது நாளில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்தார். நான்காவது நாளான நேற்று 5 சுற்றுகள் பவனி வந்தனர். தெப்போற்சவ நிகழ்வுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருமலை சின்ன ஜீயர், காவல் பணியாளர் தேர்வு வாரிய தலைவர் ஆர்.கே.மீனா, கோவில் துணை செயல் அதிகாரி லோகானந்தன் மற்றும் அதிகாரிகளும் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

தெப்போற்சவத்தின் நிறைவு நாளான இன்று ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தெப்பத்தில் எழுந்தருளி 7 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

1 More update

Next Story